Wednesday, December 14, 2016


கால்வாய் நீரழகு




கால்வாய் நீரழகு

              செஞ்சேரி அருகாமையில் கால்வாய் நீரோடுவதாக எனது தம்பி உறவினர் சபரி சொல்ல, குதூகலமானேன். நீர் என்றாலே ஆனந்தம் தானே! என் இல்லத்திலிருந்து 25 கி.மீ. இருக்கும். ஸ்கூட்டரில் போய் விடலாம். நண்பரில்லாமல் போனால் சளிப்பாயிருக்கும். எனவே மூத்த நண்பர் செலக்கரிச்சல் பழனிக்கவுண்டரை பின்னால் அமரச்செய்து பயணித்தேன். பயணிக்கும் வழி மழையற்ற வருஷத்தில் கூட கொஞ்சம் அழகாக இருக்கும். கிணற்றில் நீர் இருக்கும் பகுதியில் பயிரிட்ட பயிர் பச்சை தெரியும். பூமித்தளம் ஒரே சமனாக ஊடே ஊடே மரங்களாகவும். காற்றற்று சுழலாத காற்றாடிகளும் கண்ணுக்கு எதோவித விருந்து அளித்தன. வழியில் புலம் பெயர்ந்த வெறிச்சோடிய முத்தக்கோணாம் பாளையம் கிராமம்,  புளிய மரத்துப்பாளையத்தில் உள்ள பெரிய்….ய்…ய் …ய ஆல் மனதை சமனப்படுத்தியது. ஆல் அருகில் ஒரு நிமிஷம் நின்று அதை கண்ணாரத்தழுவி பெருமூச்சு வாங்கிக்கொண்டோம். எத்தனை வருஷத்திய பழமையான மரம். விழுதுகள் மரத்தளவு பரிமாணத்தில் இறங்கி…ஓ…..மனதை அமைதிப்படுத்தின. பெயருக்கேற்ற மாதிரி ஊரின் நுழைவில் ஒரு கோயில் முன்புறம் ஒரு புளிய மரம். கால்வாய்க்கு நீர் திருமூர்த்தி மலையிலிருந்து வருகிறது என்று சொன்னார்கள். மேற்கு கிழக்காக அகன்ற சிமெண்ட் கால்வாயில் ஓடியது. முதல் நீர் கலங்கி வந்தது. இரண்டாவது சென்ற போது நீரற்று வரண்டிருந்தது. ஏனெனில்  நீர் 15 நாளைக்கு நிறுத்தி விடுவார்களாம். அது தெரியாமல் போய் நீரற்ற கால்வாயைப்பார்த்து ஏமாற்ற மடைந்தேன். இந்த முறை தனியாக வந்தேன். இரண்டு கி.மீ நடந்தேன். நிறைய ஆட்காட்டி (செங்கண்ணி)ப் பறவைகளைப்பார்த்தேன். முதல் மாதிரி பெண்டிர் கால்வாயில் துவைப்பது குறைவு பட்டு விட்டது. வாஷிங் மெஷின் வந்த கால கட்டத்தில் இப்படித்தான் இருக்குமோ! நீர் இருக்கும் போது புகைப்படங்கள் எடுப்பது அழகூட்டும். வரண்ட கால்வாய் மனதை வெறுமையாக்கியது. ஏழு சகோதிரிப்பறவை கிளிங், கிளிங் என இசைக்க, தூரத்தில் இருந்த கோழிப்பண்ணையில் அடைபட்ட பிராய்லர் கோழிகள் பரிதாபமாகக்கூவிக்கொண்டிருந்தன. எதற்குத்தான் மக்கள் நோய் பீடிக்கப்பட்ட கோழிகளை மசாலாத்தடவி உண்ணுகின்றனரோ! பெரும் பாவம் செய்கின்றனர். கால்வாயிலிருந்து நிறைய நீர்த்திருட்டு அருகிலுள்ள தென்னைத்தோப்புக்காரர்கள் செய்கிறார்கள். அதை பொதுப்பணித்துறை தடுக்க குழாயில் அடைப்புகள் போடப்பட்டுள்ளன. மூன்றாவது முறை சென்ற போது மூத்த நண்பர் வந்தார். குடைவேல் மரங்கள் புகைப்படத்துக்கு அழகு சேர்க்கின்றன. செஞ்சேரி படித்துறையில் கொஞ்சம் ஊர்மக்கள் துவைத்தும், குளித்தும் காட்சி தருவார்கள் என பல்லடம், பொள்ளாச்சி சாலைக்குச்சென்றோம். அங்கு சுத்தமாக் துவைக்கக்காணோம். சபரி மலைக்கு மாலையிட்ட இளைஞர் மூவர் வர எனக்கு, அவர்களால் நீச்சல், நீர்க்குதிப்பு என பல நல்ல புகைப்படங்கள் கிடைக்கப்பெற்றேன். திரும்புகையில் சூடான தேனீர் அருந்திவிட்டு, வாரப்பட்டி வழியாக கிராமத்தின் எதார்த்த எழிலை ரசித்துப்பார்த்தவாறு மெதுவாக ஸ்கூட்டரில் வந்தோம்.