Sunday, October 2, 2016


செஞ்சேரி 


வனம் இந்தியா பவுண்டேசன் உபயத்தில் மரங்களுக்கு நீர்

நூறு நாள் வேலை வாய்ப்பு பெண் தொழிலாளர்களிடையே திரு. நடராஜ் உரை.


செஞ்சேரி
            செஞ்சேரி மலைக்கு இன்னொரு பெயர் மந்திரகிரி. தென்சேரி என்பது செஞ்சேரி என மறுவி விட்டது. மலைமேல் வேலாயுத சுவாமி வீற்றிருக்கிறார். மலைப்பாறைகுன்றில் ஒரு சுரங்கம் இருப்பதாகவும், அதில் சிறிது தூரம் போனால் மூச்சடைக்கும். அதற்குமேல் போக முடியாது. இந்த கிராமத்தைச்சுற்றி  திருமூர்த்தி அணைக்கட்டு நீர்க் கால்வாய் வருஷத்துக்கு 35 நாட்களாவது ஓடுவதால் இன்னும் பசுமை அப்பிக்கொண்டுள்ளது. பொதுவாக இந்த பருவத்தில் மழையின்னையால் நிலத்தடிநீர் மட்டம் குறைந்து, வாட்டமாகத்தான் உள்ளது. திடீரென ஒரு நாள் வெள்ளிக்கிழமை (2.9.16) செலக்கரிசல் 86 வயதைத்தொட்டும் சுறுசுறுப்பாக வலையவரும் பழனிக்கவுண்டரை என் ஸ்கூட்டர் பின் புறம் அமர வைத்து, அவர் வழிகாட்ட சூலூரிலிருந்து 25 கி. மீ- க்கு அப்பாலுள்ள செஞ்சேரிக்கு பறந்தேன்.
            வழியில் இத்தனை குளம் குட்டைகள் வாயைப்பிளந்து நீருக்காக தவம் கிடக்கின்றனவே என வருத்தமாயிருந்தது. தார் சாலையைத்தவிர நீர் நீச்சல் இல்லாததால் காட்சிகள் அவ்வளவு சோபிக்கவில்லை. தென்னை மரங்களை மிகுதியாகப்பார்க்கிறேன். வழியில் புளியமரத்துப்பாளையத்தில் நூறு வயதான ஆலமரம் விழுதுகளோடு பார்த்து பரவசம் மேலிட்டது. காய்ந்துபோய் பல வருஷங்களான ஒரு பெரிய குளத்துக்குள் ஒத்தையடிப்பாதையில் போய் தார் சாலையில் இணைந்தோம். எனது மூத்த நண்பர் பழனி இருந்ததால், வழி பிசகாமல் சந்திராபுரம்,  வாரப்பட்டி, முத்தக்கோனாம் பாளையம், சுல்தான் பேட்டை வழி காட்டப்பட்டு செஞ்சேரி அடைந்தோம். நல்ல வேளையாக பாதையோரத்தில் வனம் இந்தியா பவுண்டேசனின் பேருதவியால் நடப்பட்ட மரநாற்றுகளுக்கு நீர் வார்க்கும் பணியை மேற்கொண்டிருந்த வனம் இந்தியா ட்ராக்டர் டாங்க் வண்டியை அடையாளம் கண்டு நிறுத்தினோம்.
            நூறு நாள் வேலை வாய்ப்பில் பணிபுரியும் முதிய மகளிர் குடங்களில் ட்ராக்டர் டாங்க்கில் நீர் பிடித்து பாதையார நாற்றுகளுக்கு ஊற்றிக்கொண்டிருந்தனர். அந்த இடத்தில் நாங்கள் சரியாக வந்து சேர்ந்ததில் மகிழ்ச்சி கொண்டோம். நீர் அருகாமையிலுள்ள கிணறுகளில் ட்ராக்டர் டாங்க்கில் பிடித்து ஊற்றுகிறார்கள். மழைமேகங்கள் ஏன் இப்படி ஏய்க்கின்றன எனத்தெரியவில்லை. கரு மேகங்கள் கூடும் ஆனால் ஒரு சொட்டு மழை தென் மேற்குப்பருவ மழை தராது கஞ்சத்தனமாக இருந்துவிட்டது. மனிதன் ஏய்த்தால், இயற்கையும் ஏய்க்கத்தானே செய்யும். ஐந்து நிமிஷத்தில் இந்தப்புனிதப்பணியை மேற்பார்வையிடும் நடராஜன் அவர்கள் மொபட்டில் வந்து சேர்ந்தார். அங்கிருந்த இன்னொரு நண்பர் பொன்னுசாமி என்பவரை செய்ற்குழு உறுப்பினர் என அறிமுகப்படுத்தி வைத்தார்.
            அங்கிருந்து செஞ்சேரி –சுல்த்தான் பேட்டை சாலை, பச்சார் பாளையம், செஞ்சேரி மலை, குமாரபாளையம், வடவேடம்பட்டி, அருகம்பாளையம், குறிஞ்சி நகர், செஞ்சேரி மயானம் என செஞ்சேரி மலையை நோக்கிச்செல்லும் கிட்டத்தட்ட எல்லாச்சாலைகளிலும் மரநாற்றுகள் சாலையோரம் நடப்பட்டு, மூங்கில் கூடைகள் ஆடு, மாடுகள் கடிக்காமல் பாதுகாப்பாக இருக்க நாற்றுகளைச்சுற்றி வைத்திருந்தனர். காற்றில் அசையாமலிருக்க குச்சி நட்டிருந்தனர். நானாவித மர நாற்றுகளைப்பார்க்க முடிந்தது. மூவாயிரம் நாற்றுகளுக்கு மேல் நட்டிருப்பதாகச்சொன்னார். 14.9.16-க்குப்பிறகு 35 நாட்கள் திருமூர்த்தி அணைக்கட்டு நீர் கால்வாய்களில் வருவதால் மேலும் மர நாற்றுகள் நட இருப்பதாக நடராஜன் சொன்னார். அண்ணாரது தன்னலமற்ற பணியைப்பாராட்ட வேண்டும். பல உறுப்பினர்களை ஒருங்கிணைத்து முன்னின்று செயலாற்றுவது அதுவும் அன்றாடம் நேரம் ஒதுக்கிப்பணிபுரிவது குறித்து பாராட்டாமல் இருக்க முடியாது.
            மயானம் காய்ந்து போய் மழையின்மையால் வெப்பம் கொப்பளித்தது. நீர் பற்றாக்குறையிலும் வரிசைக்கிரமமாக நீர் வார்ப்பது சிரமம் தான். தினமும் ட்ராக்டர் டாங்கர் மூலம் தான் மரநாற்றுகளுக்கு நீர் வார்க்க வேண்டியுள்ளது. அதனால் வண்டி தினமும் செஞ்சேரி சாலைகளில் சுற்றிச்சுற்றி வலம் வருகிறது. சொட்டு நீர் இட வழியில்லை. பாதையோர நிழலில் வெய்யிலின் மிகையால் சற்றே ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நூறு நாள் முதும் பெண்களை ஒரு வேப்பமர நிழலில் நடராஜன் அவர்கள் கையசைத்து வரச்சொல்லித்திரட்டினார். என்னை இரண்டொரு வார்த்தைகள் பேசப்பணித்தார். அருகில் பழனிக்கவுண்டர், இருந்தார். முதலில் நடராஜன் அவர்கள் பேசினார். பிறகு நான் பேசினேன்.

            இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, பிஷ்நாய் இன மக்கள் ராஜஸ்தானிலும், அதற்குப்பிறகு சிப்காட் நிகழ்விலும் குறிப்பாக பெண் மக்கள் மரங்களை வெட்ட விடாமல் தடுத்தனர். கூடி மரத்தண்டைச்சுற்றி கைகோர்த்து நின்று, முதலில் எங்களை சிரசேதம் செய்து கொன்று விட்டு பிறகு மரத்தின் மேல் கை வையுங்கள் என வெட்டப்பட இருந்த  மரங்களைக்காப்பாற்றினர். அந்த எழுச்சி எங்கு போனது? ஆகவே ஆடு, மாடு கடிக்க விடாமல் காப்பாற்றுங்கள். குடிக்கத்தண்ணீர் நாம் உற்பத்தி பண்ண முடியாது. மழையை வருவிக்க மரங்கள் தேவை, என உரையாற்றினேன். சில மாதங்கள் சம்பளம் வரவில்லை என தாக்கீது செய்தனர், மறுநாளே இது குறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயித்து ராஜ் மாண்புமிகு மந்திரிக்கு மின்னஞ்ல் செய்தேன்.