Thursday, September 15, 2016


பொங்கலூர் காட்டூர் புதூர் மர வளர்ப்பு

மன்னிக்கவும் ராஜேஸ் குமார் அவர்களே! தங்கள் சாதனைக்கு பாராட்டுகளைத்
தெரிவித்தே ஆக வேண்டும்.
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்                                                                       தாற்றின் அடங்கப்பெறின்.
அடக்கமே அறிவுடைமை என்பதை அறிந்து நடப்பவரின் நற்பண்பு, நல்லவர்களால் அறியப்பட்டு அவருக்குப்பெருமையை உண்டாக்கும். இந்த திருக்குறல் ஒன்றே தங்களைப்பற்றி என்னை எழுதத்தூண்டியது.
கெங்கநாயக்கன் பாளையத்தில் வாழும் இளைஞர் திரு. ராஜேஸ்குமார் S.R.S. Japanese Quail Products எனும் நிறுவனத்தை இதே கிராமத்தில் நடத்தி, கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இவர் வனம் இந்தியா பவுண்டேசனின் அறங்காவலராக உள்ளார். இவர் விளம்பரத்தை விரும்ப வில்லையாயினும் நாம் இவரைப்பற்றிச்சொல்லத்தான் வேண்டும். ராஜேஸ் குமார் அவர்கள் பொருத்துக்கொள்ளவேண்டும். உங்கள் சாதனையைச்சொல்லும் போது நாட்டு மக்களுக்கு உத்வேகம் பிறந்து, மேலும் லட்சக்கணக்கான மரங்கள் வளர்ந்து நின்று வான் மழையைப் பொழிவிக்கும்.
4.07.2016- செவ்வாய்கிழமை, பல்லடத்தில் வனம் இந்தியா பவுண்டேசன் வாரக்கூட்டம் முடிந்ததும், வடுகபாளையம் மரநடுவிழாவில் கலந்து கொண்டோம். இந்த விழாவினை இனிதே முடித்துக்கொண்டு நானும், செந்தில் ஆறுமுகமும் ஸ்கூட்டரில் பொங்கலூரிலிருந்து தொலைவில் உள்ள கெங்கநாயக்கன் பாளையம் கிளம்பிப்போனோம். ராஜேஸ் குமார் அவர்களின் அலைபேசி எண்கூட எங்களிடம் இல்லை. அவரைச்சந்திக்க முடியுமா என்றும் தெரியவில்லை. பல்லடத்திலிருந்து 40 கி.மீட்டராவது இருக்கும், தொலை தூரம் தான். மரங்கள் எங்களை காந்தம் போல ஈர்த்து விட்டபிறகு தவிர்க்க முடியவில்லை. இதற்கு முன்பு கெங்கநாயக்கன் பாளையம் சென்றதுமில்லை. ஏனிந்த ஆவல் அவரைப்பார்க்க என, கேள்வி கேட்பதற்குள் சொல்லி விடுகிறேன்.
சுத்துப்ட்டு பதினொரு கிராமங்களில் காட்டூர் புதூர், செம்பட்டப்பாளையம், கெங்கநாயக்கன் பாளையம், சின்னக்காட்டூர், சோளியப்பக்கவுண்டன் புதூர், சந்தநாயக்கன் பாளையம், திருமலைநாயக்கன் பாளையம் ஆகிய கிராமக்குளம், குட்டைகளில் 2300 மரக்கன்றுகள் நட்டிருக்கிறார் இந்த இளைஞர். இந்த நல்ல உள்ளத்தைப்பாராட்ட வேண்டாமா? அவரது மரப்பிள்ளைகளைக்கண்டு மகிழ்ச்சி கொள்ள வேண்டாமா? அது தான் இவ்வளவு தொலைவுப்பயணம். அதுவும் ஸ்கூட்டரில்….. போகும் வழி தெரியாது விசாரித்து, விசாரித்து சக்கரங்கள் உருண்டன. இருமருங்கும் பச்சை பசேலென காட்சிகள். பிஏபி கால்வாய் மலைப்பாம்பு போல அங்கும் இங்கும் நீரற்றுநெளிந்தன. பேரமைதியில் வழுக்கிப்போன பாதையோ அகலமான தார்சாலை. போகும் வழிநெடுக கண்ணுக்கு விருந்து. மனதுக்கும், தேகத்துக்கும் காட்சிகள் சந்தனம் பூசின.
ஒரு மணிப் பொழுதுக்கு மேலாக பயணித்து, இறைவன் புண்ணியத்தில் ராஜேஸ் குமார் மேஜை எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தோம். தேனீர் வரவழைத்தார். அவரது இலக்கு 5000 மரங்கள், இந்தப்பகுதியில் வைப்பது என தனது குறிக்கோலைப்பகிர்ந்து கொண்டார். இதில் பாதி நெருங்கியே விட்டார். மழையின்மையும், கிணற்றில் நீர் குறைவாக இருப்பதாலும் தற்சமயம் தமது சீரிய பணியை நிறுத்தி வைத்துள்ளார். எங்கெங்கு மர நாற்றுகள் நடப்பட்டுள்ளது எனத்தெரிவிக்க, நேரில் பார்த்து பரவசப்பட தமது ஊழியர் ரவியை எங்களுடன் அனுப்பி வைத்தார். இளைஞர் ரவி மோட்டார் சைக்கிளில் முன்னே செல்ல நாங்கள் பின் தொடர்ந்தோம். இவரை சம்பளத்துக்கு நியமித்துள்ளார். இவரது வேலை மரநாற்றுகளை பார்த்துக்கொள்வது, ஆடு, மாடு கடிக்காமல் பாதுகாப்பது. சொட்டுநீர் கச்சிதமாக சொட்டுகிறதா, இரும்புக்கூண்டுகள் ஒழுங்காக நிற்கின்றனவா என்பது போன்ற கண்காணிப்புப்பணிக்கு அமர்த்தியுள்ளது, அறங்காவலரின் அக்கரையையும், மரத்தின் மீது உள்ள அன்பையும் காட்டுகிறது.
 குட்டைகளின் உட்புறம், ஏரி மேடு கீழ்புறம், நீர் அளவாக நிற்கும் பகுதி ஓரங்கள், தடுப்பு அணை வழிந்து நீர் போகும் தடங்கள், எனமரக்கன்றுகள் வைத்து அசத்தியுள்ளார். கூண்டுகள் அவசியமென உள்ள மரக்கன்றுகளுக்கு இரும்புக்கூண்டுகள் வைத்துள்ளதுள்ளதோடு ஆடிக்காற்று அசைக்க முடியாத படி மரப்பாத்திக்குள் சொருகியுள்ளது அருமை. சொட்டுநீர் சிறுகருப்புக்குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாகப்போய் எப்படியும் மரம் வளர்த்தி தலை சிலும்ப மழை வருவிப்போம் என உறுதி கூறிப்போயின. இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் தனது தென்னந் தோப்புக்கு நீர் தட்டுப்பாடாக இருப்பினும், அருகிலுள்ள குளம் குட்டை மரநாற்றுகளுக்கு விடுவது, மழை அருகிவரும் காலக்கட்டாயம் என உணர்ந்து, நீர் தரும் விவசாயிகளை நினைத்து நாங்கள் இதயம் நெகிழ்ந்து போனோம். கிராமம் ஒவ்வோன்றாகப்போகும் போது வழியில் பார்த்த மாடு மேய்ப்பவளிடம் இது உங்களுக்காக செலவு செய்து வளர்க்கும் மரங்கள். மாடுகளை மேயவிட்டுவிடாதீர்கள், என்றேன். நிழலில் கூடிக்கிடந்த கிராமியர்களிடம், இது உங்களுக்காக, மழைக்காக, நீருக்காக, நிழலுக்காக நீங்கள் பாதுகாக்க வேண்டும் என்றேன்.
திரு. ராஜேஸ் குமார் இந்த இளம் வயதில் தனது சீரிய பணியை வெளிக்காட்டாமல் தன்னடக்கத்துடன் இருப்பது நினைத்து நெகிழ்து போகாமல் என் செய்வது தோழரே! இவர் பாணி தனிப்பாணி! பாதையோரம் மரக்கன்றுகளை வைப்பதை விட குளம், குட்டை, தடுப்பு அணைவழிந்தோடும் பாதை, ஏரி மேடு சுற்றிலும் வைத்திருப்பது, காலத்துக்கும் இவர் பெயரைச்சொல்லி மரங்கள் தலையாட்டி நிற்கும். கோயிலில் ஒரு ட்யுப் லைட் கொடுத்தாலே வெளிச்சம் வெளியில் கசியவிடாமல், உபயம் என தன்பெயர் பொரிக்கும் காலகட்டத்தில், இவர் தனது பெயரை மரக்கூண்டில் பிணைக்க வேண்டாம் என்று சொன்னதும் வியப்பில் ஆழ்ந்தோம். அவரது அவா என்னவெனில் வனம் இந்தியா பவுண்டேசன் ஸ்டிக்கர் இட்டால், கூட காட்டூர் கிராமப்பொது மக்கள் என பெயர் பொரிக்கலாம் என்கிறார். இவரது மனசு விரிந்து, பரந்தது. வாழ்க! இத்தகைய நல்ல உள்ளங்களுக்காகவாவது பெண்கள் கூடி கும்பியடிப்பது போல கருமேகங்கள்  கூடி மழை பொழிய வருணபகவானை வேண்டுவோமாக!.
பயணித்ததும், எழுத்தும்
 ஆ. சுகுமார் (சின்ன சாத்தன்)
4, எசு.வி.எல். நகர்
சூலூர். 641 402


No comments:

Post a Comment