Friday, May 6, 2016

ஒன்றையொன்று…


பூனை பிடித்து வந்த அண்டகாகக்குஞ்சு

குஞ்சை இழந்து தவிக்கும் அண்டங்காக ஜோடி
ஒன்றையொன்று…………
நான் வளர்த்த மழை மரத்தில் ஒரு அண்டங்காக ஜோடி கூடு கட்டியிருந்தது. ஒரு பொழுது அந்த ஜோடி காகம் பூனையைத்துரத்திக்கொண்டு வந்தன. பூனை வாயில் ஒரு அண்டங்காக குஞ்சு. விஜயவினாகர் கோயில் அருகில் ஒரு செம்பருத்தி செடியருகில் வைத்து விட்டது. காகக்குஞ்சு உயிருடன் தான் இருந்தது. மரத்தின் மீது ஏறி கூட்டிலிருந்ததைக்கவ்விக் கொண்டு வந்து விட்டது. அம்மா, அப்பா காகம் முயற்சியில் இறங்கியிருந்தன. அருகிலிருந்த ஆலமரத்தில் அமர்ந்து கா….கா… எனக்கத்திக்கிடந்தன. என்ன முயற்சி செய்தாலும் மீண்டும் அந்த குஞ்சு கூட்டுக்கு காகங்கள் எடுத்துச்செல்ல முடியாது. நான் இடைமறித்தால் காகங்கள் என் மண்டையைப்பதம் பார்க்கும். மேலும் மரமேறிக் கூட்டில் கொண்டு போய் வைக்க முடியுமா? கொழுப்புப்பிடித்த பூனை உண்ணவும் இல்லை. கொஞ்சம் நாழி கழிந்து பார்க்க குஞ்சு அப்படியே உயிருடன் கிடந்தது. மூன்று அல்லது நான்கு முட்டை வைத்து அடைகாத்துப்பின் குஞ்சு பொரித்த பிறகு இந்த விபரீதம். ஒரு குஞ்சின் தலைவிதி அப்படியாயிற்று. நாம் இதில் செய்ய ஒன்றுமில்லை. வனத்தில் இன்னும் என்னென்ன நிகழும்!
மூன்றாம் நாள் குஞ்சை பெரிய குப்பைத்தொட்டியில் போடலாம், வாசம் பரவுகிறதே என குனிந்தால், எங்கிருந்தோ குஞ்சைப்பறி கொடுத்த ஜோடி அண்டங்காகம் பறந்து வந்து என்னை அடிக்க வந்தன. எப்படியொரு சோகம் அவைகளுக்கு! மூன்று நாட்களாகியும் காகஜோடிக்கு ஞாபகமிருக்கிறது. ஆச்சர்யமாகத்தான் உள்ளது. பறவைகளும் நம்மைப்போல் தாம். அதில் சந்தேகமா உங்களுக்கு? குஞ்சை நாய் கவ்வும் அல்லது குழி தோண்டிப்புதைக்க வேண்டும். இது முன்பொரு முறை எங்கள் வீதியில் உள்ள ஒரு வீட்டின் குட்டையான பாதாமி மரத்திலிருந்த கூட்டில் வெண்தலைச்சிலம்பன்களின் நான்கு குஞ்சுகளும் பூனை தூக்கி ஓடியது.

நாம் இதில் தலையிட முடிவதில்லை. தலையிடவும் கூடாது. அதனால் தான் பறவைகள் நான்கு முட்டைகள் வைக்கின்றன. ஒன்றிரண்டு கழிந்து விடும். பூனைகள் எங்கள் காலனியில் வளர்ப்பார் யாருமில்லை. அவைகள் இனப்பெருக்கமாகி தங்களுக்குள் ஒரு வீட்டை தத்து எடுத்துக்கொண்டன. மீதமான தயிர், பால் கொல்லைப்புறத்தில் கொட்டுவது, உணவு மீதமானவை, பிறகு இது போல குஞ்சுகள், எலி, வேலி ஓணான் என உண்டு வாழ்கின்றன. வீட்டுப்பூனை எங்கு போகும் வீட்டைஅண்டித் தான் வரும். பறவைகள் மரத்தின் மேல் தான் கூடு வைக்கும். ஈசன் பூஉலகை விளையாட்டாகப்படைத்திருக்கிறார். ஒன்றுக்கு ஒன்று உணவாகிப்போகிறது.

1 comment:

  1. தன் குட்டியையே சாப்பிடும் பூனையார் காக்கை குஞ்சுகளை மட்டும் விட்டு வைப்பாரா?
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete