Wednesday, April 20, 2016


ஆலமரத்தின் கதை





ஆலமரத்தின் கதை
            ஆலமரத்தின் விதை ஒரு மீன் முட்டையை விட சிறியதானாலும் வளர்ந்துவிட்ட பிறகு ரஜ, கத, துரக, பதாதிகள் கீழே தங்க நிழல் தந்து நிற்கும் ஒரு தடாகம். எத்தனை ஜூவராசிகள்! அட! அட!  அப்போதைய காலகட்டத்தில் கிராம சபையென்ன, சிறார் ஊஞ்சலாட்டமென்ன, பெண்கள் ஊர் வம்பென்ன, என எப்போதும் குழுமுமிடமாக இருக்கும். அக்காலத்தில் பணியர் என்ற வியாபார இனம் இம்மரத்தடியில் குழுமி வியாபாரம் செய்வர். ஆலமரத்தடியில் வியாபாரம் நடத்தினால் கொடுக்கல், வாங்கல் பிரமாதமாக நடக்குமாம். விழாக்கள் வேறு இம்மரத்தடியில் ஜோர் படுமாம். பல மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. பணியர் இதனடியில் கூடுவதால் இதற்கு Banyan Tree என்று நாமகரணம் செய்விக்கப்பட்டது. எனது மர குருநாதர் வேலுசாமி ஐயாவுக்கு இந்த மரம் எனில் உயிர். அவரது உற்ற தோழர் பழனி ஐயா ஆலான் என்று தான் பகருவார். இருவரும் வாட்ட சாட்டமாக 6 அடிக்கு மேல் 80 வயது தாண்டி இருந்தனர். பழனிக்கவுண்டர் கடின உழைப்பில் தண்ணீர் சுமந்து, சுமந்து மரங்களை செலக்கரிசிலில் வளர்த்தார். வேலுக்கவுண்டர் காசு செலவு செய்தார். இவ்வளவு கடின உழைப்பிலும் ஊர் மக்கள் விட்டேத்தி- யாக இருப்பது எனக்கு வியப்பாக உள்ளது. ஒருவரும் துணைக்கு வரவில்லை. இளைஞர்கள் தாங்கள் உண்டு தங்கள் படிப்பும், கனவுக்கன்னிகளும் உண்டு என்று இருக்கின்றனர். பிற மனிதர்கள் தானுண்டு தங்கள் பொண்டு, பிள்ளையுண்டு என பிழைபைப்ப்பார்த்து கடுகு உள்ளத்தோடு இருக்கின்றனர். ஆலமரம் இனி இப்பூமியில் அதுவும் ஊருக்குள் வாழ முடியாத நிலை ஏற்பட்டு விட்டது எனலாம். காரணங்கள்;-
# இடத்தை அடைக்கிறது (ஆம்! ரியல் எஸ்டேட் பாதிக்குமே!)
#வேரும் விழுதும் விடும் போது அருகில் உள்ள கட்டிடம் பாதிக்கும்.

கொஞ்சம் நஞ்சம் இருக்கும் மரங்களின் விழுதுகளை ஊன்ற விடாமல் மரத்தின் கீழ் வியாபாரம், தண்டுகளில் ஆணியடிப்பது, விழுதுகளில் ஊஞ்சலாடுவது, இதில் மாடு, எருமை குட்டி ஈனும் போது வரும் நஞ்சை பையிலிட்டுக்கட்டுவது, விழுது ஊன்ற வழியில்லாமல் தார் ரோடு இடுவது, ஏரி மேட்டில் வைத்து, விழுது நீரில் ஊசலாடுவது போல சகல விதமான துன்மார்க்க செயல்களையும் செய்து ஆலானை வாழ வழியற்றுப்போகுமாறு செய்வது மனிதன் உள்ளத்தில் கருணை என்பது துடைத்தெறியப்பட்டதைக்காட்டுகிறது. நீங்களெங்கே! நம் முன்னோர்களெங்கே! மண்ணில் ஆசை வைத்த மக்கள் உருப்படுவது கிடையாது. ஆலானுக்கு நிச்சயமாக இடம் தர மாட்டார்கள். அந்தகோ!
நீ மரமல்ல மகான்

ஆலமர நிழல் கிராம மையம்
அக்கால கிராம மக்களுக்கு நன்றி
ஆல் எனக்கு ஒரு சின்னத்தடாகம்
தர்ம சிந்தனை கிராமத்தாருக்கு;
ஆல் மக்கள் நீதிசபை
ஆலம் பழங்களின் சிகப்பு
இதயம் சுண்டும் காதலி விழிகள்
தடாகம் நிறையப் பறவைகள்
கிளைகள் தோறும் பறவையொலி
ஓ! ஆலே! வாழ்ந்தாலுன் போல
பெரு வாழ்வு வாழனும் பூமியில்
உன் மடி தொங்கும் விழுதுகளில்
ஊஞ்சலாடுவேன். சந்தன நிழலே!
மனசுக்குள் ஆனந்தம் முட்டும்
மைனா நானா வித ஒலி கூட்டும்
வா! உண்ணு! இளைப்பாறு!
செர்ரி நிறப்பழங்கள் அசைந்து கூப்பிடும்.
குக்குறுவான், மாங்குயில், கொண்டைக்குயில்
நீந்தும்; ஆல் எனக்கு சின்னத்தடாகம்.
சிறார் கும்மாளமிடும் திடல்
உன்னை அன்னாந்து பார்த்து
பெருமூச்சு விடுவேன்; முத்தமொன்று
கட்டிப்பிடித்து ஈய்வேன்
ஆயின் என் கைகள் போதாது
பரந்த மனசு போல நீ விரிந்தவன்
தர்மவான் போல உயர்ந்தவன்
உனை அண்டி எத்தனை ஜீவன்கள்!
ஆல் எனத்தழைத்து விரியணும்
ஆசி நல்கல் இப்போது புரியது.

நீ மரமல்ல மகான்!

No comments:

Post a Comment