Saturday, December 27, 2014


My book "Diary on the nesting behaviour of Indian Birds"-Author Chinna Sathan is now available in, on line shop amazon.in


சிட்டுக்குருவியைப்பற்றி சில உண்மைகள்


அம்பர் கோட்டை, பிகானிர் முன்புற வளாகத்தில் மாடப்புறாக்களும் சிட்டுக்குருவிகளும்

 ஜெய்ப்பூர் நகர வீதியில் சிட்டுக்குருவிகள்

            சிட்டுக்குருவி செல்போன் கோபுரத்தினால், அதன் ஜனத்தொகை குறைந்து விட்டது என்பதை விட அதற்கு கூடுகட்ட இடம் தற்போதைய RC கட்டிடங்களில் இல்லை என்பதும், அதற்கு உணவாகும் தானியங்கள் சிந்துவதில்லை என்பதும் தான் உண்மையான காரணங்கள். சூலூரில் உள்ள பஸ் ஸ்டாண்ட் அதாவது வெளியூர் பஸ்கள் நிற்கும் இடத்துக்கு தென்புறம் இரண்டு வேப்ப மரங்கள் உள்ளன. இதற்கு அருகில் உள்ள பெரிய மாடி காம்ளக்ஸ் மேலும் அதற்கு அருகில் உள்ள கட்டிடங்கள் மீதும் செல்போன் கோபுரங்கள் உள்ளன. இருந்தும் சூலூர் ஊர் குருவிகள் 50 ஜோடியாவது இரவு இங்கு தங்குகின்றன. மாலையில் சென்றால் ‘கிச்,கிச்’ என இதமான ஒலி, குருவிகள் தூங்கப்போகும் முன்னம் கேட்டு மகிழலாம்.
          இது போல அதிகாலையில் ‘கிச், கிச்’ ஒலி எழுப்பி ‘குழு குழு’வாக திசைக்கு ஒரு குழுவாக பறந்து சென்று, தோட்டி வேலை செய்வதில், தனது பசியை ஆற்றிக்கொள்கின்றன. தினமும் இதைப்பார்க்கலாம். செல்போன் கோபுர பாதிப்பு இல்லாததனால் தானே அங்கு தினமும்தங்குகின்றன. முன்பிருந்த ஓட்டு வீடுகள், குடிசை வீடுகள் இப்போது இல்லை. தாழ்வாரங்கள், ஓடு மற்றும் குடிசை பனை, தென்னை ஓலைகள் கூடுகட்ட இடமாயிருந்தது. இப்போது அவை எங்கே? கிராமத்தில் கூட RC வீடுகள். தானியம் சிந்தாத மாதிரி பிளாஸ்டிக் மூட்டைகள். அரிசியைத்தவிர மற்ற தானியங்கள் யாரும் உண்பதில்லை. குருவிகள் எண்ணிக்கை குறைந்து போனதற்கு இது தான் காரணம். தாளப்பறக்கும் பறவை இது. ஆனால் விண்முட்டும் கட்டிடங்களின் ஊடே எப்படிப்பறப்பது?

          ராஜஸ்தானில் நான் ஜெய்சால்மிரிலிருந்து ஜோத்பூர் ரயிலில் வரும்போது, ரயிலில் சிந்திய தின்பண்டங்களை தின்ன குருவிகள் சில வந்து ரயில் பெட்டிக்குள் மேய்ந்து கொண்டிருந்தது பார்த்து வியந்து போனேன். ராஜஸ்தானில், மாடப்புறாக்களுக்கு மக்காச்சோளம் போன்ற தானியங்களை, காரில் வந்தும், மோட்டர் சைக்கிளில் வந்தும் மூட்டையில் விசிறி விடுகிறார்கள். பிகானிர், அம்பர் கோட்டை முன்பு இந்த மாதிரி தூவி விட்ட தானியங்களை மாடப்புறாக்களோடு சிட்டுக்குருவிகளும் கொத்தித்தின்கின்றன. ராஜஸ்தான் மக்கள் இப்படி தானியம் விசிறி விட்டிருப்பதைப் பல அரண்மனை முன்பு பார்த்தேன். அவர்கள் பறவைகளின் மேல் அன்பு வைத்துள்ளனர். மாடப்புறாக்கள் அபரிமிதமாக உள்ளன.அதே வேளையில் குருவிகளும் தமிழ் நாட்டை விட அதிகம் உள்ளன. மக்களை ஒட்டி வாழும் இந்தப் பறவை ராஜஸ்தானில் அதிகம் இருக்கும் போது இங்கு குறைவு பட்டது மனிதனின் தங்குமிடக் கட்டிடமும், உணவு முறையும் மாறிப்போனதால், நம்மை நம்பியிருந்த சிட்டுக்குருவிகள் எங்கோயோ தொலைந்து போயின. இவைகளை மீட்டு எடுக்க வேண்டும்.

Saturday, December 20, 2014

யமுனை நதிக்கரைப் பறவைகள்

Ruddy Shelduck

Spurwinged Lapwing

            காதல் சின்னமான தாஜ்மஹாலுக்குப்பின் புறம் யமுனை நதி செல்கிறது. நதியில் வெள்ளம் அதிகம் இல்லை. நான் நவம்பர் ’2014 –ல் சென்ற போது சில பறவைகள் நதிக்கரையில் கண்டேன். அவை கரண்டி வாயன்(Spoon Bill), நீர் காகம்(Cormorant), மஞ்சள் மூக்கு நாரை(Painted Stork), நெடுங்கால் உள்ளான்(Black winged Stilt), பட்டைத்தலை வாத்து( Bar headed goose), கருட தாரா(Ruddy Shelduck), ஸ்பர் விங்குடு புலோவர்(Spurwinged Plover) என்ற பறவைகள் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தின.
கடைசி இரு பறவைகளும் எனக்கு புது அறிமுகம். கடைசிப் பறவைக்கு தமிழிலில் பெயர் இன்னும் வைக்கவில்லை போலும். எனது பறவை குருநாதர் க. ரத்னம் நூலான தமிழில் பறவைப் பெயர்கள் நூலில் இல்லை. இது தமிழ் நாட்டுக்கு வருகை புரிவதில்லை. இறுதிப்பறவையை நான் ஆக்ரா யமுனை நதிக்கரையில் பார்த்த போது செங்கண்ணி(Redwattled Lapwing) எனத் தவறாகப்புரிந்து கொண்டேன். கணனியில் உருப்பெருக்கிய போது அதனை இனம் காண முடிந்தது. இதற்கு உதவியது சலிம் அலியின் The Book of Indian Birds. கடைசி இரண்டு பறவையும் தமிழ் நாட்டுக்கு வருகை புரிவதில்லை. கருட தாரா வாத்து. இது லடாக், நேப்பாள், திபெத்தில் இனப்பெருக்கம் செய்வது. இது ஒரு குளிர் கால வருகையாளர். ஆற்றில் நீந்திக்கொண்டும், தோளில் முகம் புதைத்து உறங்கியும், பறந்து கொண்டும் குழுவாக இருந்தது. இவை மிக அழகான வண்ணத்தில் கண்ணுக்கு சுவை கூட்டுகின்றன. ஆறு, குளங்களில் இவற்றைப்பார்க்கலாம்.
ஸ்பர் விங்குடு புலோவர் இரண்டு யமுனை ஆற்றின் மணற்கரையில் நின்றிருந்தன. இவை வாழிடம் இங்கு தான். இதனை நான் அடையாளம் கண்டு கொண்டது ஸ்வராஸ்யமான விஷயம். அவைகளாவன;-
1.    வட இந்தியாவில் பார்த்தது.
2.    ஜோடி
3.    ஆற்றங்கரை மணற்வெளி
4.    கூனிக்குனிந்திருக்கும் கருப்புத்தலை
5.    நம்பார்வைக்கு தவிற்கும் பாவனை
6.    இதன் வடிவம், நிறம்

இவ்வாறாக ஒரு பறவை செங்கண்ணி என நினைக்க வைத்து தடுமாற வைக்கும் போது நாம் இப்படித்தான் இனம் காண வேண்டும். இதற்கு திறமையான நுண்ணறிவு தேவை. இந்த பறவை டையாளம் காணல் வெற்றிகரமாக அமைந்து விட்டால்,  நமக்கு அன்றைக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சியைத்தரும்.

Thursday, December 11, 2014


ஜெய்சால்மிர்


  


                       

பயணங்கள் ஆன்மாவைப்பக்குவப்படுத்தும் 

        நாங்கள் ராஜஸ்தான் பிரயாணத்திட்டம் தயாரிக்கும் போது ஜெய்சால்மிர் போக நினைக்கவில்லை. ஆனால் பிகானிர் சுற்றி வரும் போது வழிகாட்டி சன்சய் கண்டிப்பாக ஜெய்சால்மிர் போக வேண்டும். இவ்வளவு தூரம் வந்த பிறகு நீங்கள் தார் பாலைவனம் போகாமல் போனால் உங்கள் உலா முற்றுப்பெறாது என வற்புறுத்தவும், எனக்கும் அங்கு செல்ல ஆசை இருந்துகொண்டே இருந்ததும் காரணமாக எங்கள் உலாவை மாற்றி அமைத்தோம். காலை 7.20-மணிக்கு லால்கர் ஃபோர்ட்டிலிருந்து ரயில். குளிரில் கம்பளியோடு சுறுட்டிக்கொண்டு எழுந்து . வெடவெடக்க ஆட்டோவில் கனத்த பைகளோடு 05.45-க்கு ஏறி, 5 கி.மீ பிரயாணித்தோம். ரயில் பாலைவனத்துக்குள் பிரயாணித்தது, எனக்கு வாழ்நாளில் புதுமையாக இருந்தது. பாலையில் கூட பறவைகள், சில விளைச்சல்கள், மேயும் ஒட்டகங்கள் என பிரயாணத்தை அனுபவித்தேன். போகும் வழியில் கஜ்னர், மான்கள் சரணாலயம் வந்தது. அது ஒரு அடர்த்தியான முட்காடு.
     ஜெய்சால்மிரில் இறங்கினோமோ இல்லையோ எங்களைச்சுற்றி தங்கும் விடுதிக்காரர்கள் சூழ்ந்து கொண்டு இழுத்தார்கள். அலாவுதீன், சாம்ராட் விடுதி முதலாளி ஜுப்பில், பிரயாணித்து மதியவேளையில் 1.30-க்கு விடுதியை அடைந்து குளித்து, உணவு வேளை தவறியும் உண்டோம். இளைஞர்,மண்டூ என்ற ஓட்டுனருடன் மணல் குவியல்களுக்குப்பறந்தோம். கோட்டைகள் தற்போது டிக்கெட்டில் காட்சிப்பொருளானதுஅல்லது அது ஓட்டலாகிப்போனது. எத்தனை அழகான கோட்டைகள்! ஒளிரும் விளக்குகளில் ஒளிர்ந்து மயக்கின. அவற்றில் தங்கக்கூடிய அளவு நான் செல்வந்தனில்லையே என ஆதங்கம் மிகுந்தது. பாகிஸ்தான், அங்கிருந்து 60 கி.மீ தூரத்திலிருந்தது. 40 கி.மீ ஜிப்பில் பிரயாணித்து தார் மணல் குன்றுகளை அடைந்தோம். மாலை சூரியன் அஸ்தமனமாவதற்குள் தார் பாலைக்குள் நுழைந்து விடவேண்டும் என பரபரப்பு எனக்கு. ஆனால் நண்பர் இங்கு வந்து ஒரு ஜெயின் கோயிலிற்குள் நேரத்தை செலவழித்தது, டென்ஷன் கொடுத்தது. நான் பாக்யவான். சரியாக சூரிய அஸ்தமனமாகும் போது  தார் பாலைக்குள் ஒட்டக முதுகில் சவாரியில் இருந்தேன். கடவுளே! மணல் குன்றுகள் அட!அட! என்னென்ன வடிவங்கள்! தாழ்ந்தும், ஏறியும் ஒரு அழகிய பெண்படுத்திருந்ததைப் போல…… ..…….
             ஆரஞ்சு சூரியப்பந்து ஒட்டக முதுகில் விழுந்து மறைய எத்தனித்தது. என்னை நோக்கி வந்த இளம் பெண்கள் ராஜஸ்தான் அடர் நிறம் மற்றும் அணிகலன்களில் ஒப்பனையோடு இருந்தனர். என்முன் பாட்டுப்பாடியவாறு ஆடினர். ஒளிப்படமாக என் காமெராவுக்குள் சென்றனர். ..ஒ....... இவர்களுக்கு இந்த மணல்வெளிதான் சொற்பமான காசு கொடுக்கும் பூமி. Silhouette ராஜஸ்தான் இளம் பெண்களின் நடன அசைவுகள், முற்றுமான பாலைக்குன்றுகளில் சிகப்பு ஆதவனில் மறைய எத்தனிக்கும் தருணம், ஒட்டகங்கள் என்னை வேடிக்கை பார்க்க….என் வாழ்நாளில் எஞ்சிய நாட்களில் இதுவும் என்னுள்ளே எஞ்சி நிற்கும் நண்பரேநான் பாக்யவனாகிப்போனேன்.


Saturday, December 6, 2014


பரத்பூர் பறவை சரணாலயம்


சரணாலயத்துக்குள் நான் சுற்றிய சைக்கிள்

Lessor whistling Teal

Nilgai

            1938-ல் இந்தியாவுக்கு வியாபாரியாக வந்த ஆங்கிரலேயன் வைஸ்ராய் லின்லில்த்கோ என்ற கிங்கரன் 12 நவம்பர் அன்று 4273 பறவைகளை சுட்டு மாபெரும் பாவத்தை வாங்கிக்கொண்டான். ஜாலியன்வாலா படுகொலைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம். இந்த இரத்தப் பீரிட்ட, பறவைக்கதறல் எதிரொலித்த 29 .கி.மீ இடத்தில் நான் இன்று சைக்கிளில் உலவிக் கொண்டு இருக்கிறேன். காலை 07.30-க்கு இன்னும் காற்றில் பனிக் குளர் இருந்தது. தேநீர் மட்டும் எனது அலுவலக ஊழியர் தயாரித்துக் கொடுத்ததை அருந்தியிருந்தேன். மதியம் 12.00 மணி வரை சைக்கிளில் தனியாக நின்று, மிதித்து, தள்ளி, நடந்து உலவினேன்.என்னோடு வந்த ஒரே ஒரு நண்பரும் சைக்கிளில் வேறு மார்க்கத்தில் சுத்திக்கொண்டிருந்தார். பசியிருப்பினும் பறவைகளின் நேசத்தின் மிகை, அதை அசட்டை செய்தது.
அங்கங்கே காய்ந்த மடுக்கள், இடையே அகன்ற கால்வாய், குளம் என வித்தியாச முகம் கொண்டு எனைப்பார்த்த பூமியில் பான்கங்கா, காம்பில் என்ற இரு நதிகள் நீரை ஊட்டுகின்றன. மரங்கள், முட்காடுகள், நீர் நிலை என அப்சரஸ் நாட்டிய மேடை இது. இங்கு மான்கள் வேட்டை, சிறுத்தை வேட்டை நடந்த காட்டுமிராண்டிக்காலமும் உண்டு. ஆங்கிலேயன் துப்பாக்கியோடு இந்தியாவுக்கு வந்ததிலிருந்து, அரக்க குணத்தால் 50 ஆண்டுகள் வேட்டை, சகட்டுமேனிக்கு நடந்துள்ளது. 1902-1965 வரை இந்த Keoladeo bird sanctuary-ல் வாயில்லா ஜீவன்களின் கொலைகள் நடந்தது. 1965-ல் கடைசி சிறுத்தை, பலி கொண்டபிறகு நாகரிகம் தலைதூக்கியது. 1967-ல் வனக்கட்டுப்பாட்டில் வந்தது. 1981-ல் ராம்சர் சைட் பிறகு 1985-ல் World heritage site-ஆனது.
வலசைப்பறவைகள் இந்த வருஷம் நிறைய மழை பெய்ததால் பல்வாறு இடங்களுக்குப் பிரிந்து பறந்துவிட்டன. அதனால் எனக்கு ஏமாற்றமே நிலவியது. 2500 கி.மீ தாண்டி வந்தும் எனதருமைப்பறவைகள் என்னைக்காணாது வேற்று நிலம் போனது. எல்லாமே அறிமுகமான பறவைகள். Blue throat, Scope Owl இரண்டு மட்டுமே எனக்கு புது வரவு. Lessor whistling Teal, Shovellor, White cheeked bulbul மற்றும் Nilgai (மான்இனம்!) கண்ணுக்கு விருந்தளித்தன. கானா கேட் எனும் இடம், சரணாலயப்பகுதி. இது ஆக்ரா--ஜெய்பூர் பிரதானசாலையில் உள்ளது. சரணாலயத்துக்குள் நடக்கலாம். ரூ 40 கொடுத்து சைக்கிளில் அலையலாம். சைக்கிள் ரிக்ஷா, ஒட்டக வண்டி, குதிரை வண்டி என வாடகைக்கு எடுத்து, உள்ளே பறவை கண்காணிப்பு செய்யலாம்.

மற்ற வண்டிகள் பறவைகளை, தொந்தரவுக்கு தள்ளும் என அனுமதி இல்லை. நீறைய வெளிநாட்டினர் வருகை புரிகின்றனர். நுழைவுக்கட்டணம் ரூ 50.  உள்ளே கைடுகள், வாட்ச் டவர், தொந்தரவு ஏற்படுத்தாத கேண்டீன் உள்ளன. கோவையிலிருந்து நேராக ஆக்ரா, அங்கிருந்து பஸ்-சில் பரத்பூர் 61 கி.மீ. சரணாலயம் ஒட்டியே,நிறைய தங்கும் விடுதிகள் உள்ளன. Pelican, Robin, King fisher என்ற பெயர்கள் விடுதிக்கு வைத்து அசத்தியிருக்கிறார்கள். வசதிக்குத் தக்க விடுதி அறைகள் உண்டு. பறவை அன்பர்கள் கண்டிப்பாக கண்டு களிக்க வேண்டிய பறவை சரணாலயம். வாழ்நாளில் இன்னொரு முறை போவேனா என்பது சந்தேகமே……..

Tuesday, November 4, 2014


கோதபாளையம் மான்கள்- ஒருபயணம்

எங்களை எட்டிப்பார்க்கும் ஆண் புள்ளி மான்கள்

மான்கள் பாதுகாவலருடன் நண்பர் விஜயகுமார்

            கோதபாளயம் என்ற தெக்களூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் மான்கள் நிறைய உலவுவதாக சில செய்திகள் பத்திரிகைகளில் வர, நாங்களும் போகலாம் என ஒத்தி வைத்து, சில வருஷங்களுக்குப்பின்,மொகரம் (4.11.14-செவ்) அன்று அந்த சுபதினம் வந்தது. விஜயகுமார் கார் ஓட்ட, நானும், பாஸ்கரனும் பின் இருக்கையில், விஐயகுமார் மகள் முன் இருக்கையில் பயணித்தோம். போகும் போது மங்கலம் வழியில் புதையல் வேட்டை போல விசாரித்து,சுற்றுவழியில் செல்ல நேர்ந்தது. வரும் போது நேர் வழி. 

        கோதபாளயம் அன்பர் குருசாமி, மான்கள் உலவும் பூமியின் உரிமையாளர். எங்களுக்கு அறிமுகமில்லை. இருந்தும் அவர் மான்கள் பார்க்க பெரும் உதவி புரிந்தார். அவர் பண்ணயத்தோடு, மான்களையும் பாதுகாத்துவருகிறார். இதை மான்கள் சரணாலயம் ஆக்கிட பல முயற்சிகளுமே தோல்வியில் முடிவுற்றுள்ளன. முதலில் மான்கள், கோடையில் தீனி பற்றாக்குறையில் பல தனியார் தோட்டங்களில் புகுகின்றன. ஒரு நீர் குட்டை உட்புறம் உள்ளது. 80 ஏக்கர் பொது இடம் போதாது என சம்மந்தப்ட்ட அரசு நிருவாகம் சொல்கிறது.  சமீபத்தில் பெய்த மழையில் பூமி பச்சைப்போர்வை போர்த்தியுள்ளது. அதனால் மான்களுக்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கு தீவனம் கிடைக்கும். செங்காந்தல் மலர்களைப்பார்த்து சொக்கிப்போனேன். மான்கள் குளம்புத்தடங்கள் ஈர மண்ணில் பதிந்திருந்தன. மயில்களின் அகவலுடன், உதிர்ந்த இறகுகளும் எங்களுக்குக்கிடைத்தன. முட்காடு, இடைஇடையே காய்கறி விளைச்சல் குருசாமி செய்திருந்தார். தானாக ஆக்கரித்த பார்த்தீனியம் எங்களைப்படுத்தின. 
      ஈப்பிடிச்சான், மாடப்புறா, புள்ளி ஆந்தை, கெளதாரி, தாம்பாடி, பனைக்கருவி,மயில் எங்களை ஆனந்தப்படுத்தின. ஒற்றையடிப்பாதை வழி சென்று ஒருசில மணி நேரத்துக்குப்பிறகு, புள்ளிமான்கள் கூட்டம் ஒன்று, தூரத்தில் தெரிய எங்கள் மனசு மான்கள் போல துள்ளிக்குதித்தது. புள்ளி மான்கள் எப்போதும் ஆன்மாவுக்கு சந்தோஷம் கூட்டுவன. அதன் மருண்ட பார்வை, வெகுளியான நடவடிக்கை, அழகு, ஓடும் பாங்கு என ஒவ்வொன்றும் ரசிக்க வைப்பவை. அழகான பெண்ணுக்கு உவமையாக மான்கள் வந்து கைகொடுக்கும். 
       அப்படியே நடந்து போனதில், இரண்டாவது போனசாக கொம்புள்ள இரண்டு மான்கள் தூரத்தில் எங்களை ஆடாமல் அசையாமல் பார்த்துக்கொண்டு நின்றன. கொம்புள்ளவை ஆண்மான்கள். இதை நிழற்ப்படம் எடுக்க முடிந்தது. மான்கள் பார்த்த திருப்தியில் திரும்பி, தாதா காலத்தியவேப்பமரத்துக்கடியில் உள்ள சிறு பெருமாள் கோயிலுக்கு வந்தோம். குருசாமியிடம் கொஞ்சம் நேரம் அளவளாவி விட்டு நன்றி சொல்லி புறப்பட்டோம். மான்கள் எப்படியோ இங்கு வந்து இனப்பெருக்கம் செய்து, வனமற்ற பகுதியில் இருக்கின்றன. அதுவும் பொது மற்றும் தனியார் நிலங்களில் வாழ்கின்றன. அவைகளுக்கு தீனி பிரச்னை, மேலும் மனிதன் இடையூறுகளைத்தாங்கி வாழ்கின்றன. இவைகளுக்கு நாம் என்ன செய்திட முடியும். குருசாமி ஜீவகாரண்யம் செய்கிறார் என்று மட்டுமே உணரமுடிகிறது.

Saturday, October 25, 2014

மழையில் பயணம்


Dorai bhaskaran watches Birds at scrub land of Balaji, Palladam Puliampatti
Balaji P. Balachandaran and Me at scrub land

Beauty of Puliampatti village


மழையில் பயணம்
மழை எனக்குப்பிடித்தமானது. ஒவ்வொரு மழைத்துளியும் பூக்களாக என் மீதும், நண்பர் துரை பாஸ்கர் மீதும் சொரிய ஒரு ஆனந்தப் பயணம், அதுவும் ஸ்கூட்டரில்…… வானிலை அறிவிப்பு கணத்த மழை பெய்யும் என்று சொல்லியும், பயணம் மேற்கொண்ட தூரம் 60 கி.மீ இருக்கும். நண்பர் பாலாஜியின் வெல் வேலமரக் காட்டில் வரும் பறவைகளைக்காண மழையோடு மழையாக சாலையில் வழுக்கினோம். நகரத்தை விட கிராமம் அழகானது. இந்த வருஷப் பருவமழை எதிர் பாரா சந்தோஷத்தைக்கொண்டு வந்த விதம் அருமை. சென்றபாதை இருமருங்கிலும், பச்சைக் கம்பளம் போர்த்தியது போல பயிர்கள். இலக்கு பல்லடம் புளியம்பட்டி. பாதையெங்கிலும் மழையின் ஈரம், குளிர்வான காற்று, முகத்தில் வீழும் மழைப்பூக்கள். ஓ! மக்கள் மழையைக்கண்டு ஏன் பயந்து சாலையோரத்தேநீர்க்கடையில் ஒதுங்குகிறார்கள்! கரிய மேகப்போர்வைகள் எமக்குப்பொன்னாடை. எனக்காகவே எதிரில் யாருமற்ற சாலை. சில இடங்களில் செந்நீர் சேகாரமாகிய குட்டைகள். அதில் இரு முக்குளிப்பான்கள் நீந்தி, நனையும் போது நானும் நனைவதில் ஆனந்தம் தான்.
பாலாஜி சுடச்சுட தேனீர் தந்து விருந்தோம்பலைத் தொடங்கினார். குளிரில் நமத்த தீக்குச்சிகள் போலிருந்த விரல்கள், சூடேறும் விதமாக தேநீர் சுவைத்தோம். அத்தோடு பாலாஜியின் நூல் தொகுப்பு பிரமிப்பை வரவழைத்தது. அத்துனையும் பறவை பற்றிய அரிதான நூல்கள். இந்த அளவுக்கு பறவை நூல் தொகுப்பு கன்னிமாரா நூலகத்தில் கூட இல்லை என்றே சொல்வேன். நான்”Diary on the nesting behavior of Indian Birds” நூல் எழுத ரெஃப்ரன்ஸ் நூல்களுக்கு கன்னிமாரா நூலகத்தின் அலமாரிகளில் தேடியும், கன்னிமாரா கணனியில் தேடியும், கிடைக்காத நூல்கள் கூட இருந்தன. 200 வருஷத்திய பழமையான Douglas Devar. Stuart Baker நூல்கள் கூட அரும்பாடு பட்டு சேகரித்துள்ளார். இவர் ஒரு வித்தியாசமான நண்பர். எனக்குப் பரிட்சயமானதில், பெரும் மகிழ்வு கொள்கிறேன். அதுவும் வாசிப்புப்பழக்கமற்ற நண்பர்கள் தான் எனக்கு மிகை. எல்லாருமே காட்சியாளர்கள்(Viewers). நூல் வாசித்து கருத்துகளை பரிமாறிக்கொள்ள கிடைத்த வெகு சிலரில் இவர் கிடைத்தற்கரிய புதையல். அவரின் நூல் புதையலைப்போல என எடுத்துக்கொள்ளலாமே! வாசிப்புப் பழக்கமற்ற நண்பரிடம் நூல் விருந்தை எப்படிப்பரிமாறிக்கொள்வது?
மதிய நேரம் மழை,  சினிமாவில் இடைவேளை விடுவது போல விட்டதும், பாலாஜியின் 15 ஏக்கர் முட்காடுக்கு பயணித்தோம். வெல்வேல மரங்கள் அதுவும் லைக்கென்ஸ் படர்ந்த மாசற்ற முள் மரங்கள் எங்களை வரவேற்றன. உயர்ந்து நின்ற காற்றாடிகள் அழகூட்டின. வாலடி சிகப்பு கொண்டைக்குருவிகள், வெளிநாட்டு தாம்பாடிகள், உமாபட்சி(f), வெண்தலை சிலம்பன்கள், செண்பகம், மாட்டுக்கொக்கு, பெரிய சாம்பல் சிலம்பன்கள், கொண்டலாத்தி, கரிச்சான், செங்கண்ணி, குயில், புதர்க்குருவிகள், பச்சைக்கிளிகள், ஊதா தேன் சிட்டு என முட்காட்டினைக்கூட இறைவன் அழங்கரித்தார். நூற்றுக்கணக்கில் தாம்பாடிகள் மின்ஒயரில் மாநாடு நடத்தியது கண்ணைக்கவர்ந்தது. மாடுகளோடு தோழனாய்ச்சென்ற கொக்குகள், மேய்ச்சலில் இருந்த ஆடுகள் என, இயற்கைத் தோழமையோடு இருக்கும் போது காலம் அற்றுப்போவது விந்தை. ஈரமான உள்ளத்தில் அன்பு மலர்வது போல, ஈரமான மண்ணில் எதுவும் முளைவிட்டு நமக்குத்தரும்.
கிராமிய அழகு, அழகு தான். வெள்ளந்தியான சிறிதளவே தேவை கொண்ட எளிய மக்கள், எளிமையான வீடுகள், பெரிய நிழல் மரங்கள், பலதலைமுறைகண்ட கோயில், கண்மாய், குறுகிய வீதிகள் தரும் நிம்மதி, அனுபவித்தால் தான் தெரியும். நகரத்தின் வானளாவிய ஃப்ளேட்கள் உங்களுக்கு பிடிக்கிறதா என்ன? பாலாஜியின்மனைவி, விருந்தோம்பலில் மூன்று வகைப் பொரியல்களோடு பரிமாறியது உண்மையில் மாறுபட்ட சுவை கூட்டின. திருவள்ளுவரின் விருந்தோம்பல் குறலான கீழே தருவது என் நினைவுக்கு வந்தது,
‘செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்து இருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு’-         திருவள்ளுவர்
பாலாஜியின் தந்தை எங்களுடன் அரைமணிப்பொழுது விருந்துண்டபிறகு அளவளாவிக்கொண்டிருந்தார். மைய ஆசாரம் பழமை மாறாமல் புதுப்பித்து வைத்திருந்தது மனதைக்கவர்ந்த ஒன்று. பாலாஜியின் முட்காட்டில் 60 வகையான பறவைகள் வந்ததை பட்டியலிலிட்டு, வைத்துள்ளார். மாலையில்  அந்தவெல்வேல முட்காட்டில் பறவைகள் அதிகம் வரவும். தங்கவும் செய்யுமென பாலாஜி சொல்ல, மாலை நேரம் ஒரு நாள் மழைவிட்ட பிறகு மஞ்சள் வெய்யிலில் வருவேன் என்றேன்.

            விடைபெற்று, மீண்டும் மழையோடு மழையாக ஸ்கூட்டரில் நண்ரும், நானும் மழைக்கோடுகள் நிழற்படத்தை சட்டமிட்டது போல மீண்டும் 30 கி.மீ பயணத்தை சந்தோஷம் குமிழிட அனுபவித்தோம்.

Friday, October 17, 2014

பெருமாள் மலை வனவலம்- Trekking ( 4.10.2014-சனிக்கிழமை)


Rough sketch map prepared by Guna

vellaipparai-  standing middle Dr.Gunasekaran,& Mohan prasadh: (sitting) Dinesh

            பெருமாள் மலை படு உயராமனதும், வெள்ளியங்கிரி மலையைப் போலவே பராக்கிரமம் வாய்ந்தது. இதன் ரகஷ்யங்கள் தெரியாமல் ஏறப்போக படு சிரமத்துக்கு ஆளானோம். இந்த கரடு முரடான மலை மீது ஏற புரட்டாசி சனிக்கிழமைகளில் காட்டு இலாக்கா அனுமதி வேண்டியதில்லை. நாங்கள் மூன்றாவது சனிக்கிழமை சென்றோம். ஏழு பேர் சென்றதில் ஒரே ஒரு நண்பர் வீரர் குணசேகரன் மட்டுமே மலை முகட்டை தொட முடிந்தது. இந்த பராக்கிமமலையை தெற்கிலிருந்து தேவராயபுரம் வழியாக நாங்கள் அணுகினோம். விராலியூர்காரர்கள் தென்மேற்கு திசையிலிருந்து வருவார்கள். கேரளத்திலிருந்து, வெள்ளக்குளம் கிராமத்தினர் மேற்கிலிருந்து வருவார்கள். வடக்குப்புறமாக அணுகக்கூடியவர்கள் தூமனூர் காரர்கள். (Please refer attached sketch map given by Dr. Gunasekaran- not for scale) வடக்கில் செம்பக்கரை வழி வந்தால் யானை துரத்தும். ஆயுள் கெட்டியாகஇருந்தால் தப்பிக்கலாம்.
            வடக்கில் Slim Ali Centre for ornithology and natural science (SACON) உள்ளது. நான் இங்கிருந்து இரண்டொரு முறை பறவை நோக்கலில் தூமனூர் சென்றிருக்கிறேன். அடிவாரப்பெருமாள் கோயிலில் இருந்து தீபம் காட்டினால் முகடுப்பெருமாள் கோயிலுக்குத்தெரியும். முன்னோர் திறமையைப்பார்த்துமெய்சிலிர்க்கிறேன். இச்சிக்குழி என்ற காட்டு ஓடை வழியாக அடிவாரப் பெருமாளை தரிசித்து விட்டு மலையெறலாம் வாருங்கள். முதலில் எங்களை தடுமாற வைத்தது அப்போது தான் அங்கிருந்து சென்ற ஒரு ஜோடி யானையும் அதன் குட்டியும்; குட்டியோடு இருப்பின் தாய் யானையும், தகப்பன் யானையும் கோபம் கொள்ளும். வழி மாற்றி நடந்தோம். காட்டுப்பன்றிகள் கிழங்கு சாப்பிட நிறைய இடங்களில் மண்ணைப்பறித்திருந்தன.

            விலாவாரியாக இப்போது எழுத மாட்டேன். அதை எனது எட்டாவது நூலாக,சந்தியாப்பதிப்பகத்தின் மூலம் வெளியிடயிருக்கும் மலைமுகடு (Trekking) எனும் நூலில் படித்து வியப்படையுங்கள்.  முதலில் எங்களை சிராய்த்தது முட்காடு(scrub jungle). நடந்தோம். மலைமேல் நீர் ஓடை ஒன்றுமே இல்லாதது வியப்புத்தான். அதனால் நா வரட்சி. பிறகு சைக்கஸ் (Cycus)நிறைய காணமுடிந்தது. இவை அறுகி வரும் தாவரம். வெளியில் இனப்பெருக்கம் நிகழ்த்தும் தாவரம். வெள்ளைப்பாறை வந்ததும் தண்டபாணி திரும்பினார். அதற்கு முன்னமே பிரகாஷ், சந்தோஷ் கழன்று கொண்டனர். வெள்ளைப்பாறைக்கு இடது பக்கம் சோத்தாபாளையம் வெகுசிறு கோயில். பிறகு வரண்ட இலையுதிர் காடு (Dry deciduous forest)தென்படுகிறது. வழி,மழை பெய்தால் இறங்கிவரும் சிற்றோடைகள் தாம். வழியெங்கிலும் யானைச்சாணம். நிறைய வண்ணத்துப்பூச்சிகள் சிறகடித்தன. ஈரமான இலையுதில் காடு(Moist deciduous forest) ஆரம்பத்திலேயே இடி மின்னலுடன் மழை வெழுத்துக்கட்ட, எண்பது விழுக்காடு நடந்த நானும் மோகனும் திரும்பினோம். பிறகு தினேஷ் அரைமணிக்குப்பின்பு திரும்பினார். நான் நடந்த நேரம் ஆறரை மணிப்பொழுது.இலையுதிர் காட்டில் நான்கடிக்குப்புல்வெளி பரந்து கிடக்கிறது. குணா நடந்த நேரம் பதினோரு மணிப்பொழுது. கடைசி மலை படு பிரயத்னப்பட்டு ஏறிய நண்பர் குணா, மனைவி தொடுத்த துளசி மாலையை உச்சிப்பெருமாளுக்கு சாத்தி, வழிபட்டார் எங்களுக்காகவும், அவர் குடும்பத்துக்காகவும்……….

Wednesday, October 1, 2014


சுறுட்டைப்பள்ளி    ---          ஒரு பயணம்



                                          

                    பயண சுகம் ஆன்மாவுக்கு தேவையானது. அரக்கோணத்திலிருந்து திருவள்ளூர் வரை ரயில், பிறகு ஆட்டோவுக்கு பத்து ரூபாய் கொடுத்து, பேருந்து நிலையம் சென்றேன்.அந்தப்பேருந்து பூண்டி நீர்த்தேக்கம் வழியாக உளுந்தூர் பேட்டை சென்று, அங்கிருந்து வேறொரு பேருந்து மூலமாக சுறுட்டைப்பள்ளி போய்ச்சேர்ந்தேன். தனிமைப்பயணம். சுறுட்டைப்பள்ளியில் எம்பெருமான் ஆலகாலவிஷத்தை அருந்தி, சிறிது மயக்கத்தில் அம்பாள் பார்வதி மடியில் படுத்து ஓய்வு கொள்கிறார். தேவர்கள் சமுத்திரத்தைக்கடைந்து அமிர்தம் எடுக்க நினைக்க ஆலகாலவிஷம் வெளிப்பட்டதால் பயந்து அரற்றி சிவபெருமானிடம் வேண்ட, அவர் விஷத்தைஉள்ளகையில் வைத்து சிறியதாக்கி உட்கொள்ள, பார்வதி தேவி கழுத்தைப்பிடித்து உண்ணலாகாது எனப்பிடிக்க, விஷம் கழுத்துக்கண்டத்தில் தங்கி விட்டது. எனவே நீலகண்டர் எனப் பெயர் பெற்றார்.
தெய்வங்கள், சிவபெருமானிடம் ஓடோடி வந்து, அலறி உதவி கேட்டனர். யாவரும் அழியும் நிலைமை. அமுதம் கிடைக்காது போகும். விஷ்ணு, பிரம்மா போன்ற தெய்வங்கள் பயப்பட்டு, விஷத்தைப்பங்கி உண்ணலாம் எனக்கூடச்சொல்லவில்லை.உமாதேவி தடுத்தும் கேட்டாரில்லை. விஷத்தைத்தொண்டையில் அடக்கினார். இத்தகைய கருணையாளர். அவரால் தெய்வங்கள் பிழைத்தன.
அப்பர்பிரான்
பொங்கி நின்றெழந் தகடல் நஞ்சினைப்
பங்கி உண்டதோர் தெய்வமுண்டோ சொலாய்-  5-6-1,2

                கோயில் பழமையான கோவில் என்று சொல்லமுடியாது. புதுப்பித்துள்ளார்கள். சிற்பங்கள் இல்லை. அனந்தசயனர் விஷ்ணு பல கோயில்களில் Srirangam மாதிரி தரிசிக்கலாம். சிவபெருமான் பார்வதிதேவி மடியில் படுத்த நிலை ஒரு காணக்கிடைக்காத காட்சி. கோயிலில் கூட்டமில்லை. தரிசித்துவிட்டு வெளியில் வந்து நிழலில் அமர்ந்தேன். மண்டபத்தில் ஒரு அன்பர் மூன்று பழம் கொடுக்க ஒரு பழம் போதுமே என வாங்கிக்கொண்டேன். சந்நதியில் காசு கொடுத்து லட்டு ஒன்று வாங்கினேன். காகம் ஒன்று தையரியமாக, அருகில் வந்து லட்டு கேட்டது அந்நியம். அது பக்தர்களிடம் உணவு பெற்றே பழக்கப்பட்டு விட்டது. உணவு தேட எங்கும் போவதில்லை.

            திருப்பு பயணத்தில், ஒரு ஷேர் ஆட்டோவில் பின்புறம் லக்கேஜ் மாதிரி அமர்ந்து வந்தேன். ஒரு மணிப்பொழுது காத்துக்கிடந்து ஒரு பேருந்தைப்பிடிக்க திருவள்ளூர் வரை கூட்டநெரிசலில் நின்று கொண்டு வந்தேன். ஆட்டோ கேட்டால் ரூ 50 என ஒரு மினி பஸ்சைப்பிடித்து ரயிலடி வந்தேன். பசி எடுக்க, கடலைமிட்டாய் கிடைக்குமா என கடைகளில் பார்க்க கிடைக்கவில்லை. நல்லவேளை! ஆவின் பாலகம் ரயிலடியில் தென்பட பால் அருந்தினேன். மதியம் இரண்டைநெருங்கிக்கொண்டிருந்தது. ரயிலுக்காகக்காத்திருந்தேன். வாழ்க்கை ரயில் பாதை போல நீண்டிருக்கிறது என் முன்னே…………………….